Thursday, July 05, 2007

ராமதாஸ் சொல்வது சரி!?


கல்விக் கூடங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. எல்.கே.ஜியில் இருந்து பட்ட மேற்படிப்பு வரையில் கல்வி அறுவடை தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இத்தகைய தவறுகள் நடக்கின்றன என்பதை சம்பந்தப் பட்ட அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். முதலமைச்சர் கருணாநிதியும் தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை என்று சொல்கிறார்.

தவறு நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிற இராமதாசு கொடுக்க வேண்டும் என்கிற போதுதான் பிரச்சனை வருகிறது.

மாணவர்களும் பெற்றோர்களும் ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களிடமிருந்து ஆதாரத்தை நான் பெற்று தரவேண்டும் என்று சொன்னால் பிரச்சனையைத் திசை திருப்புகிற செயல் என்று தானே அர்த்தம்?

எங்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கட்டாயமாக நன்கொடை வாங்கினார் கள் என்று மாணவர்கள் புகார் கொடுத்தால் அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? கல்லூரி நிர்வாகம் பழிவாங்காதா? பழிவாங்காது என்று அரசு உத்தரவாதம் தருமா? புகார் கொடுத்ததற்காகப் பழிவாங்கப் பட்டால் அத்தகைய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் தருகிறோம் என்று அரசு அறிவித்தால் மாணவர்கள் துணிந்து புகார் கொடுப்பார்கள்.

அப்படி ஒரு உத்தரவாதத்தை அரசு கொடுக்குமா? கொடுத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் புகார் கொடுக்க வரிசையில் நிறுத்தத் தயார். ஆதாரத்தைக் கொடுங்கள் என்று அமைச்சரும் கேட்கிறார். முதலமைச்சரும் அப்படி கேட்கிறார். அப்படியானால் இந்தத் தவறைத் தடுக்க வேறு வழியே இல்லையா? வேறு நடைமுறை இல்லையா? அரசுக்கு அதிகாரமே இல்லையா? அத்தனையும் இருக்கிறது.

1992ஆம் ஆண்டில் தமிழக அரசு கட்டாய நன்கொடை தடை சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதில் அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியது, புகார் என்று கருதுவதற்குக் காரணம் இருக்கும் பட்சத்தில் அல்லது இந்தச்சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று கருதுவதற்கு காரணம் இருக்குமெனில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றவர்கள் புகார் தர வேண்டும் என்று காத்திருக்காமல் தானே கல்லூரிகளுக்குச்சென்று சோதனை போட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதாகும்.

ஆனால் இந்த அதிகாரத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஆட்சியும் பயன்படுத்தவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரத்தைத் தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் கட்டாய நன்கொடை ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டிருக்கும். சட்டத்தில் கொண்டு வந்ததில் இருந்த வேகம் அதனை அமல்படுத்துவதில் இல்லை யென்பது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

4 Comments:

Blogger சிவபாலன் said...

நன்றி:


செய்தி: மாலைச் சுடர்


படம்: தினமலர்

July 05, 2007 7:54 AM  
Blogger வடுவூர் குமார் said...

வேதனை அளிக்கக் கூடியதாகும்.
நிச்சயமாக அதுவும் ஏழை மாணவர்கள் அதுவும் படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு.

July 05, 2007 8:16 AM  
Blogger Boston Bala said...

பொன்முடிக்கு ராமதாஸ் பதில்: அதிக கட்டண வசூல் தொடர்பாக என்னிடம் தகுந்த ஆதாரம் உள்ளது. சென்னைக்கு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக 52 மாணவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

--------------------------------------------

ஜென்டில்மேன், சிவாஜி படம் எல்லாம் ஹிட் ஆன மாதிரி அரசியலில் படம் எடுக்கிறார்கள்.

அடிக்கிற மாதிரி அடி; அழுகிற மாதிரி பாவ்லா :))

Accountability வேண்டாம். ஆனால், குற்றஞ்சாட்டுவதற்கு மட்டும் ஒருவர் தேவை.

July 05, 2007 8:35 AM  
Blogger சிவபாலன் said...

உண்மையில், வடமாவட்டங்களில் பா.ம.க.வை பலவீனப்படுத்தும் முயற்சியில் பொன்முடி தீவிரமாக இருக்கிறார் என்பதுதான் டாக்டரின் கோபத்திற்குக் காரணமாம். இதேபோல சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் போன்ற பா.ம.க.வின் செல்வாக்கான பகுதிகளிலும், தங்களை பலவீனப்படுத்த ஆங்காங்கே தி.மு.க. அமைச்சர்கள், சில காரியங்களைச் செய்கிறார்கள். கலைஞரின் ஒப்புதலுடனேயே இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றும் கோபப்பட்டிருக்கிறார் டாக்டர். அதன் வெளிப்பாடுதானாம் இது.’’



நன்றி: குமுதம் ரிப்போட்டர்

July 05, 2007 10:07 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv