சமுதாயத்தில் மேலே இருப்பவர்களைக் கீழே தள்ளிவிட்டு, கீழே இருப்பவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வருவதுதான் இட ஒதுக்கீடு என்று ஒரு பிரிவினர் கருதுவதால்தான் இந்தப் பிரச்னையில் அடிக்கடி சர்ச்சை எழுகிறது.
மேலே உள்ளவர்கள் அப்படியே இருக்கட்டும். கீழே உள்ளவர்களையும் - பின்னுக்குத் தள்ளப்பட்டு பல நூற்றாண்டுகளாக அப்படியே இருப்பவர்களையும் - மேலே கொண்டு வருவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற ஆயுதம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாததால்தான் இந்த சர்ச்சை.
இன்னும் சொல்லப்போனால், நலிந்த மக்களின் உரிமைதான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு.
இதை மையமாக வைத்துதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1917ல் துவக்கப்பட்டு, நாளடைவில் அது நீதிக் கட்சியாக மாறியது.
1. ஆண்டாண்டு காலமாக அரசு அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நிலையை மாற்றி, எல்லா பிரிவினருக்கும் அரசாங்கத்தில், நிர்வாகத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கம்.
2. இந்த இட ஒதுக்கீடு இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்றும் இப்போது கேள்வி எழுப்பப்படுகிறது.
3. இந்தியா விடுதலை பெற்று 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. தாழ்த்தப்பட்டவர்கள். ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் இன்னுமா முன்னேறவில்லை?
4. இவ்வளவு காலம் அந்தப் பிரிவினர் இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்தது போதாதா? என்று ஒரு தரப்பினர் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.
5.
இந்தியா போன்ற பன்முக அமைப்பைக் கொண்ட நாட்டில் நலிந்த பிரிவு மக்கள் ஒரே இரவில் முன்னேறிவிட முடியாது. இந்தப் பிரிவு மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய 100 ஆண்டுகள்கூட ஆகலாம்.6.
இட ஒதுக்கீட்டை அரைகுறை மனதுடன் அமல் படுத்தியதன் விளைவுதான் இந்த கால தாமதத்துக்குக் காரணம் என்று கூட கூறலாம். 7. தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதையே இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
8. இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் என்ற கருத்து, பிற்படுத்தப்பட்டோரில் தொடங்கி இப்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வரை வளர்ந்துவிட்டது.
9. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறும் தகுதி படைத்த பிரிவினரில் வசதியானவர்களை (கிரீமி லேயர்) நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருப்பது பற்றி நாடு முழுவதும் விவாதம் துவங்கிவிட்டது.
10.இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த வேண்டும் என்பது இதன் முக்கிய அம்சம்.கூடவே, இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மிகாமல் மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
11. பின்தங்கிய வகுப்பினரில் வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கும் அதிகமானால், நாட்டில் ஜாதீயம் நிலைத்துவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து சொல்லியிருக்கிறது.
12.
சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கியவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால், அவர்களது சமூக அந்தஸ்து இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
13. மேலும் வருமானம் என்பது நிரந்தரமானது அல்ல. வருமானத்தை அளவீடாக வைத்து இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையே தகர்க்கப்பட்டதாகிவிடும். 14. பின்தங்கியவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டாலே, இந்த பொருளாதார அளவுகோல் வாதம் அடிபட்டுவிடும்.
15. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று, அதன் மூலம் டாக்டர்கள், வக்கீல்கள், துணைவேந்தர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் என்று ஆனவர்கள் எல்லாம் முன்னேறியவர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகளுக்கெல்லாம் இடஒதுக்கீடு எதற்கு? அவர்களை கிரீமி லேயர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவோர் பட்டியலில் இருந்து விலக்கிவிடலாமே? என்ற கருத்து இப்போது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
16. தந்தைதான் மேலே வந்து விட்டாரே... மகன் எப்படிப் போனால் என்ன? என்பதைப் போன்றது இது.
17. இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறித்து நாடு முழுவதும் விவாதம் துவங்கிவிட்டது.
18. சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள, அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார்.
19. சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களுக்குதான் இட ஒதுக்கீடு. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு அல்ல என்பதை அரசியல் சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. 20. சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பல நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
21. சமூக ரீதியாகவும் அவர்கள் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
22.
பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் ஜாதி முறை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் ஜாதீயம் நிலைத்துவிடும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
23. அரசியல் சட்டத்தால் இட ஒதுக்கீடு உரிமை பெறத் தகுதி உள்ளவர்கள் பட்டியலில் கிரீமி லேயர் என்ற ஒரு புதுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டால், அதுவே பிற்காலத்தில் இன்னொரு புதிய சமூகத்தை உருவாக்கிவிடலாம்.
24, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரில் கிரீமி லேயர் பிரிவைக் கண்டுபிடிப்பதில் காலத்தைச் செலவிடுவதைவிட, இட ஒதுக்கீட்டை நியாயமாகவும் தீவிரமாகவும் அமல்படுத்தினால், கீழே இருக்கும் மக்கள் விரைவில் தாமாக முன்னேறிவிடுவார்கள்.அத்தகைய நிலை வர பாடுபடுவோமே! ?